தீண்டாதாருக்கு விமோசனம் முகமதியரைத் தழுவுவதை விட வேறு கதியில்லை  - எவனெழுதினாலென்ன குடி அரசு - கட்டுரை - 25.10.1931

Rate this item
(0 votes)

 

தீண்டாதார் நிலை 

சகோதரர்களே ! தீண்டாதார் என்பதாக ஒதுக்கித் தள்ளிவைத் திருக்கும் நம்முடைய சமூகத்தின் எண்ணிக்கை இந்தியாவில் சுமார் 7 கோடி மக்கள் இருக்கின்றோம். நாம் தெருவில் நடந்தாலும், மற்றவர்கள் கண்ணில் நாம் தென்பட்டாலும், நமது நிழல் மற்ற மனிதர்கள் மேல் பட்டாலும் தீட்டு ஒட்டிக்கொள்ளுமென்றும், தோஷமென்றும், உடனே குளித்தாக வேண்டு மென்றும், சிலர் குளிப்பது கூட போதாதென்று ஏதாவது ‘பிராயச்சித்தம்' செய்து கொள்ளவேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள். 

இவை தவிர, நமக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால் நாமாகப் போய் மொண்டு கொள்ளும்படியானதொரு பொதுக்குளமோ, குட்டையோ, ஏரியோ, கிணரோ கிடையாது. நாம் எந்தக் குளத்தை யாவது, கிணற்றை யாவது தொட்டுவிட்டால் அவற்றை மந்திரங்கள் சொல்லி புண்ணியார்ச் சனை செய்து தண்ணீரையும், மாட்டு மூத்திரத்தையும் தெளித்து சுத்தம் செய்தாகவேண்டும். 

நாம் குடி இருக்கவேண்டிய இடமோ ஊருக்கு ஒரு மைல், அரை மைல் தூரத்தில் குடிசைகள் கட்டிக்கொண்டு அங்குதான் வாழ வேண்டும். அங்கும்கூட ஓட்டு வில்லை வீடோ, மெத்தை வீடோ கட்டி அதில் நாம் குடி இருந்தால் ஊருக்கே கேடு வந்துவிடுமாம். நாம் வாழும் இடத்துக்கு சேரி என்று பெயர். நாம் வாழுகின்ற பக்கம்தான் ஊர் ஜனங்கள் குப்பை, செத்தை கொண்டுவந்து போட்டுவைப்பதும், ஊரார் மல ஜலம் கழிக்க வருவதுமான இடமாக உபயோகித்துக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில் அவற்றிற்கு காவலாய் இருக்குமாம். 

 

நமக்கு வேலையோ தோட்டி வேலை தான் பாரம்பரியமாய் சொந்த மானது. மற்றும் ஊர்கூட்டி, மலம் அசிங்கம் முதலியவைகளை எடுத்து சுத்தம் செய்வதும், பிணம் சுடுவதும், செத்த மிருகங்களை அப்புறப்படுத்து வதும், கழணி வயல் முதலியவைகளுக்குக் குப்பை, செத்தை முதலியன கொண்டுபோடுவதும், மற்றும் தானியம் விதைத்து அறுப்பு அறுத்து மிராசுதாரன் வீட்டிற்குத் தானியம் போய்ச்சேரும் வரையில் சகலவேலையும் செய்வதும், வீட்டிலும், வயலிலும் சேருகட்டி வைத்திருக்கும் தானியத்திற்கு காவல் இருப்பதும், மற்றும் இது போன்றவைகளுடன், தப்புக்கொட்டுதல், செத்துப்போன பிணங்களுக்காக அழுதல், பிணத்தின்மீது போடும் அரிசியை எடுத்துச் சமைத்து சாப்பிடுதல், பிணத்தின்மீது போத்தி இருந்த துணியில் கொஞ்சம் கிழித்து எடுத்துக்கட்டிக்கொள்ளுதல், இரவிலும், பகலிலும் 10, 20, 30 மைல்கள் தூரமுள்ள வெளியூர்களுக்குச் சேதி கொண்டு போதல், முதலிய காரியங்கள் செய்யவேண்டியதும் நமது பிறப்புரிமை யாகும். 

இவை ஒருபக்கமிருந்தாலும் நமது பிள்ளைகள் படிக்கக்கூடாது என்பது மேல் ஜாதிக்காரர்களின் கட்டளையாகும். அதுவும் மதத்தை ஒட்டிய கட்டளையாகும். அவற்றை மீறி படிப்பதாயிருந்தாலும் பள்ளிக் கூடங்கள் கிடையாது. எங்காவது ஒன்று இரண்டு பள்ளிக்கூட வசதிகள் இருந்தாலும் நமக்குச் சம்பளம் கொடுக்கவும், புஸ்தகங்கள் வாங்கிக் கொடுக் கவும், துணிமணி கொடுக்கவும், படிக்கும் பையனுக்கு சாப்பாடு போடவும் சௌகரியம் கிடையாது. கிராமங்களில் இருக்கும் நம்மவர்கள் இவ்விஷயங் களைப்பற்றி நினைக்கவே கூடாது. 

இவை தவிர நமக்கு நாவிதன் கிடையாது, வண்ணான் கிடையாது, நாமாகத் துவைத்துக்கொள்ளலாம் என்றாலும் அதற்கும் கிணறு, குட்டையும் கிடையாது. ஒரு கிராமத்தில் 500 வீடு இருந்தால் அங்கு 20 பறையர் வீடு இருந்தால் அந்த 20 வீட்டுப் பறையர்களும் அவர்களது பெண்டு பிள்ளைகளும் எல்லாமுமே மேற்கண்ட 500 வீட்டுக் குடிமக்களுக்கும் 

அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த குடும்பத்தைப் போல் அடிமை வேலை செய்யவேண்டியதாகும். இரவு பகல் என்கின்ற கணக்கே கிடையாது. கூலி கேட்டால் உதை கிடைக்கும். விவசாய அறுவடையின் போது களத்தில் பிச்சைவாங்குவதும், மற்றபடி சட்டி எடுத்துக்கொண்டுபோய் வீடு வீடாய் 'பிச்சைபோடுங்க சாமி' என்று கூப்பாடு போட்டு பிச்சைசோறு கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டியதாகும். பிச்சைசோறு கேட்கும் சட்டிகூட முழுசாய் இருந்தால் அது ஒரு பெரிய குற்றமாகிவிடும். ஏனெனில் கிராமத் தில் பறையன் முழுசட்டி எடுத்துப் பிச்சை எடுத்தால் கிராமத்திற்கு கெடுதி ஏற்பட்டுவிடும் என்கின்ற ஒரு ஐதீகம் உண்டு. ஆதலால் நல்ல சட்டியாய் இருந்தாலும் வாய்ப்பாடுகளை உடைத்து ஓடு மாதிரியாக ஆக்கிக் கொண்டு தான் சோத்துப் பிச்சைக்கு போகவேண்டும். 

 

சில இடங்களில் ரொம்பவும் மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் பறையர்களுக்கு பிச்சை சோறு போடமாட்டார்கள். ஏனெ னில் பறையனுக்கு சோறுபோட்டால் வீட்டிற்குள் சட்டியில் இருக்கும் சோறெல்லாம் தீட்டாய் (சேஷமாய்) போயிடுமாம். இது மாத்திரமல்லாமல் இன்னும் ஒரு மதக்கொள்கை உண்டு. அதென்ன வென்றால் சில மேல் ஜாதிக்காரர்கள் சாப்பிட்ட எச்சிலையில் உள்ள மீதியையும் அவர்களுக்கு தேவையில்லாத மீதத்தையும் கூட பறையருக்குக் கொடுத்தால் பெரிய தோஷம் ஏற்பட்டுவிடும் என்று கருதி, குளிவெட்டி புதைத்துவிடும்படி செய்வதும் உண்டு - நமக்கு பிச்சைசோறு போடக்கூடிய ஜாதியாரோ, கெட்டுப்போனதையும், ஊசிப்போனதையும் தான் பத்திரமாய் வைத்திருந்து நமது சத்தம் கேட்டதும் ஓடி ஓடிப்போய்க்கொண்டுவந்து போடுவார்கள். நிற்க, 

துணிவிஷயத்திலும் இப்படித்தான் நமக்கோ புதுத்துணி வாங்கிக் கட்ட காசுகிடையாது, கட்டினாலும் பொறாமைப்படுவார்கள். மேல் ஜாதிக் காரர்கள் கட்டி கிழித்த கந்தலையே கட்டவேண்டும். அப்படி கட்டுவதற்கும் சில முறைகள் உண்டு. அவை என்னவென்றால் வேஷ்டியை இடுப்பில் முழங்காலுக்கு கீழே தொங்கவிட்டு கட்டக் கூடாது, மேலேயும் துணி போடக்கூடாது, பெண்கள் மார்பை மூடக் கூடாது என்பன போன்ற கட்டுப் பாடுகளுடன், மற்றும் தங்கம், வெள்ளி நகை போடக்கூடாது என்பதும் குடைபிடிக்கக்கூடாது என்பதும், காலில் செருப்புப் போடக்கூடாது என் பதும், பித்தளை, வென்கலப்பாத்திரங்கள் உபயோகிக்கக்கூடாது என்பது மான பல நிபந்தனைகளுண்டு. 

இவ்வளவும் தவிர தமிழ்நாட்டில் பல ஜில்லாக்களில் பூமிகளை ஒருவருக்கொருவர் விற்கும்போது அந்த பூமியில் வேலை செய்யும் அடிமைகள் என்பதாக நம் பெரியோர்களின் பெயர்கள் போட்டே அந்த வழி அடிமை என்பதாக நம்மையும், குடும்பத்துடன் விற்றுவிடுவதுமுண்டு. அந்த பூமியை வாங்கினவர்களுக்கு எல்லாம் நாம் அடிமைகளாவோம். மற்றும் பல ஜில்லாக்களில் நம்மவர்கள் படும் பாடு சொல்லவே முடியாது. உங்களில் பலர் காதால் கேட்டுகூட இருக்கமாட்டீர்கள். 

அதாவது, மலையாள ஜில்லாக்களில் நம்மில் ஒரு வகுப்பாரை "நாயாடிகள்” என்று சொல்லுவது உண்டு. அவர்கள் எந்த ரோட்டிலும் நடக்கக்கூடாது. சுமார் 50 கெஜம் முதல் 100 கெஜத்திற்கு மேற்பட்ட தூரத்தில் தான் எந்த ரோட்டிலும் இருக்கவேண்டும். அவர்கள் எங்கும் எவ்வித தொழிலும் செய்யமுடியாது. யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியில் சாலைத் தெருவில் ஒரு துணியை விரித்துப் போட்டு விட்டு, காட்டுக்குள் ஓடிப்போய் மறைந்து கொண்டு “தம்பிரானே தம்பிரானே” என்று கூப்பாடு போடவேண்டும். சாலையில் நடக்கும் ஜனங்கள் அதில் ஏதாவது பண்டமோ, காசோ போட்டுவிட்டு போனால் மாலையில் ஒரு வருக்கும் தெரியாமல் வந்து எடுத்துக்கொண்டு ஓடிவிட வேண்டும். இதைத் தவிர எங்காவது வயல்களில் சிந்திக்கிடக்கும் நெல்லுகளைப் பொறுக்குவதும், மற்றும் ஏதாவது பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளை கல்லால் அடித்துப் பிடித்து சுட்டுத் தின்பதும் ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே செய்யமுடியாது. 

இதைத் தவிர மலையாளத்தில் மற்றும் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் நம்மிலும் கொஞ்சம் பெரிய ஜாதியென்று சொல்லிக்கொள்ளு வார்கள். ஆனால் அவர்கள் தெருவில் நடக்கும்போதே ‘ஹா' 'ஹா' என்று சத்தம் போட்டுக் கொண்டே வரவேண்டும். ஏனெனில் “தாழ்ந்த ஜாதிக்காரனாகிய நான் வருகிறேன். எதிரில் வரும் உயர்ந்த ஜாதியார்களே! விலகிக் கொள் ளுங்கள்” என்று குறிப்பு காட்டுவதற்காக. அதாவது மூலை முடக்குகளில் மோட்டார்கார்கள் வரும்போது எதிரில் வண்டி வந்தாலும் வராவிட்டாலும் அது ஹாரன் ஊதுவது போல் சத்தம் போடவேண்டும். ஆனால் மோட்டார் மூலைமுடக்குகளில் மாத்திரம் ஊதும். இவர்களோ நேர்ரோட்டில் போகும் போதும் மற்றவர்களுக்குத் தான் கீழ்ஜாதிக்காரன் என்று தெரிவிப்பதற்காக வேண்டி சத்தம் போட்டுக்கொண்டே வரவேண்டியதாகும். 

சமூகத்துரையில் 

இவை தவிர சமூகத்துறையில் நமக்கு இருக்கும் ஸ்தானமானது நாம் எந்த விதத்திலும் நமது இன்றைய நிலைமையை விட்டு மாற முடியாமலும், நாம் எப்படியும் பணக்காரர்கள் ஆகமுடியாமலும், நாம் ஒரு தனித்தொழில் செய்து சுதந்திரமாயிருக்கமுடியாமலும், நமது நிலைமையை உயர்த்திக் கொள்ள படிக்கவோ அல்லது அதிக வரும்படி உள்ள வேறுதொழிலில் போய் சேரவோ மார்க்கமில்லாத நிலைமையிலேயே இறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றோம். எவ்வளவு தான் நம்மவர்கள் முன்னுக்கு வருவதா னாலும் சுயராஜிய அரசியலில் பியூன் வேலைக்கு லாயக்காகலாம், மிஞ்சினால் போலீஸ்காரன் வேலைக்கு லாயக்காகலாம், ஸ்தல சுயாட்சி களில் கக்கூஸ் எடுப்பதில் இருந்து, குப்பை மேஸ்திரி வேலைக்கு லாயக் காகலாம். இதுவும் அந்தந்த இலாகா "தேசீயத்தலைவர்கள் தயவு வைத்து கொடுத்தால்தான் உண்டு. மற்றபடி குமாஸ்தா வேலைக்கோ அதற்கு மேற்பட்ட ஏதாவது உத்தியோகஸ்தர் வேலைக்கோ வர நமக்கு மார்க்கமே கிடையாது. 50 லட்சம் ஜனத்தொகை கொண்ட கிறிஸ்துவர்கள் வேறு மதக் காரராய் இருந்தும் பார்ப்பனர்களுக்கு சமமாக அனேகம்பேர் உத்தியோகம் பதவி முதலியவை பெற்று வாழுகின்றார்கள். நம்மைப்போலவே 

எண்ணிக்கையுள்ள முகமதியர்கள் அன்னிய மதக்காரர்களாய் இருந்தும், அதாவது 8கோடி இருந்தும் சற்று ஏறக்குறைய அவர்களது ஜனத்தொகைக் குள்ள விகிதாச்சாரம் எல்லா உத்தியோகங்களிலும் இருக்கிறார்கள். மற்றும் இவர்களில் அநேகர் ஏராளமான பணக்காரர்களாகவும், வியாபாரிகளாகவும் விவசாயக்காரர்களாகவும், பேங்கர்களாகவும் இருக்கிறார்கள். இந்துக்களில் உள்ள மற்ற வகுப்பார்களும் கூட எவ்வளவோ முற்போக்கடைந்திருக் கிறார்கள். ஆனால் 7 கோடி ஜனத்தொகை கொண்ட நாம் (இந்த நாட்டுப் பழங்குடி மக்களாக இருந்தும்) தீண்டாதார் அல்லது பஞ்சமர் என்கின்ற பெயரை உடைய நாம் எந்த அளவில் படித்தவர்களாய் இருக்கின்றோம், உத்தியோகஸ்தர்களாயிருக்கின்றறோம், பணக்காரர்களாய் மிராசுதாரர்களாய், பாங்கர்களாய், வியாபாரிகளாய் இருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள். படித்தவர்கள் 1000-க்கு ஒருவர் உண்டா ? பணக்காரர் 10000 க்கு ஒருவர் உண்டா ? பதவி உள்ளவர்கள் 100000 க்கு ஒருவர் உண்டா ? இதன் காரண மென்ன? 

"ஆதி" பட்டம் 

நாம் தானே இந்நாட்டின் பழம் பெரும் குடிமக்கள் என்று ஆதாரம் இருக்கின்றது. நமக்குத்தானே ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரர், ஆதி மராட்டியர், ஆதி கர்னாடகர் என்கின்ற பெயர்கள் வழங்குகின்றன. இந்த “ஆதி” பட்டமெல்லாம் நாம் என்றும் நிலையாய், அடிமையாய், தீண்டாதார ராய் இருப்பதற்கு அனுகூலமாக கொடுக்கப் பட்டதே யொழிய, மற்றபடி இந்நாட்டின் பழம் பெருங்குடி மக்கள் என்று மரியாதை செய்து முற்போக் கடையச் செய்விப்பதற்கு கொடுக்கப் பட்டதா? அல்லது உதவுகின்றதா? என்று எண்ணிப் பாருங்கள். ஒரு நாட்டிற்கு வ்வித சுதந்திர மிருந்தாலும் பூரண சுயேச்சை இருந்தாலும்-சுயராஜிய மிருந்தாலும் அன்னாட்டிலுள்ள 3-ல் ஒரு பங்கு மக்கள் தீண்டாதார் என்றும், கீழ் ஜாதியார் என்றும், பாடுபட்டு உழைத்து, மற்றவர்களுக்கே போட்டு விட்டு, தெருவில் நடக்கவும், குளத்தில் தண்ணீர்மொள்ளவும், ஊருக்குள் குடியிருக்கவும் உரிமையில்லாமலும், வயிரார உண்ண முடியாமலும் இடுப்பார உடுத்த முடியாமலும் இருக்கும் படியான மக்கள் உள்ள நாடாயிருந்தால் அந்த நாடு கொடுங்கோன்மை ஆக்ஷி உள்ள நாடு என்று சொல்லுவதல்லாமல் அதற்கு ஏதாவது மேற் கொண்ட யோக்கியதை உள்ள பெயர் கொடுக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

இதற்கு காரணம் என்ன? நம் குற்றம் தான் 

நிற்க, சகோதரர்களே! மற்றொரு விஷயத்தையும், நான் சொல்லாமற் விடுவதற்கில்லை. அதாவது நாம் மேல் கண்டபடியான இழிவுக்கும், கொடுமைக்கும் பாத்திரமானதற்கு நாமே முக்கிய காரணஸ்தராய் இருந்து வரும் நம்முடைய அறிவீனத்தையும், மானமற்ற தன்மையையும் எடுத்துச்சொல்லித் தீர வேண்டுமல்லவா? அதைச் சொல்லுகின்ற போது நீங்கள் வருத்தப்படக் கூடாது. நான் சொல்லுவது உண்மைதானா? அல்லது அல்லவா? என்று யோசித்துப் பார்க்கவேண்டும். உண்மையென்று பட்டால் உடனே கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன். 

 

சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுவதற்கும், தீண்டாதவர்களாய் நடத்தப் படுவதற்கும் முக்கிய காரணமென்ன என்பதை யோசித்துப்பாருங்கள். வெள்ளைக்காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீனா ஜப்பான்காரர்களிலாவது தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ்ஜாதியாராகவும் நடத்துகின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப் பட வேண்டும்? நாமும் ஏன் வெகு காலமாகவே அதற்கு இணங்கி நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும்? என்பன போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள். 

அன்றியும், வெளி நாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவனாவது, முகமதி யனாவது நம்மைத் தீண்டாதாரராய் நடத்துகின்றார்களா? அன்றியும் சீனா ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்துவரும் சைனாகாரன் ஜப்பான்காரன் முதலிய பௌத்தர்களாவது நம்மை தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே. 

மற்றபடி யார் நம்மை தீண்டாதாரராய் யார் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள். நம் நாட்டிலே பிறந்து நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள்தான் நம்மை தீண்டாதாரர் களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள்? என்று பாருங்கள். நாமும் அவர் களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல. மற்றெதற்காக என்றால் நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லா மல் வேறு எந்தக் காரணத்தாலு மல்ல. அதாவது நம்மையும் நம்மைத் தீண்டாதவர்களாக பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து எல்லோரும் இந்துக்கள் என்றும் இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை. பெரிதும் வேறு நாட்டாரும் வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும் பௌத்தரையும் கிறிஸ்து வரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லுகின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெ னில் அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும் சுயமரியாதையே பிரதானமானதினாலும் அவர்களை யாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே "புத்தி கற்பித்து விடுவார்கள். ஆதலால் நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் ‘இந்து' என்னும் மதம் தான் நம்மை தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதே யொழிய வேறு எந்தக் காரணத்தினாலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா? ஆகவே நம்மில் எவன் ஒருவன் தன்னை 'இந்து' என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் தன்னை மற்றொரு இந்து என்பவன் தீண்டாதான், பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன். இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகு காலமாக நமது முன்னோர்கள் காலம் தொட்டு நாம் ‘சண்டாளப் பறைய ராய்' தீண்டாதாராய் நடத்தப் பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன் மூலம் நாமே நம்மை தீண்டாதார் என்று ஒப்புக்கொண்டும் வந்திருக்கின்றோம். அப்படி இருக்க இன்று நாம் திடீ ரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு “நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது” என்று சொன்னால் அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா? இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா? 

ஒரு மனிதன் தன்மேலெல்லாம் மலத்தை எடுத்துப் பூசிக் கொண்டு வந்து எதிரில் நின்று “என்னைப் பார்த்து யாரும் அசங்கயப் படக்கூடாது. என்னை எட்டிப்போ என்று யாரும் சொல்லக் கூடாது” என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அல்லது அது நியாயமாக வாவது இருக்குமா? அல்லது “மலம் பூசிக்கொண்டு வருபவர்களைப் பார்த்து யாரும் அசங்கயப் படக்கூடாது எட்டி நில் என்று சொல்லக் கூடாது” என்று இந்தியன் பினல் கோடில் அதாவது கிரிமினல் சட்ட புஸ்தகத்தில் ஒரு செக்ஷன் போட்டு அதற்கு ஒரு வருஷ தண்டணை என்றும் போட்டு விட்டதினாலேயே அந்தப்படி அசங்கயப்பட்டு எட்டி நில் என்று சொன்னவர்களில் இரண் டொருவரை தண்டித்துவிட்ட தினாலேயே அசங்கயப்படும் குணத்தை மக்களிடமிருந்து மாற்றிவிட முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். 

இதுபோலவேதான், இந்துக்களில் மற்றொரு சாரார் தங்கள் மதத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் தங்களை சூத்திரர் என்று யாரும் கூப்பிடக் கூடாது என்றும், “சூத்திரனென்றால் ஆத்திரம் கொண்டடி” என்றும் சொல்லு கிறார்கள், எழுதி ஆங்காங்கு தொங்கவிடுகிறார்கள். இதுவும் பேதமைத் தன்மை என்றே சொல்லுவேன். ஏனெனில் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் எவனையும் ( அதாவது அவன் பார்ப்பனரல்லாதவனாய் இருந்தால்) அவனை 'சூத்திரன்' என்று கூப்பிட உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. அதை மறுப்பவன் மூடனேயாவான். ஏனெனில் இந்து மதத்தில் சூத்திரன் என்கின்ற வகுப்பு உண்டு என்பதும் அது பார்ப்பனரொழிந்த ஏனையோருக்கும் உரித்தானது என்பதும் இந்து வாய் இருக்கும் ஒவ்வொருவனும் ஒப்புக்கொள்ள வேண்டியதே யாகும். இந்துக்களுக்குள் எத்தனை உட் பிரிவு சமயக்காரர்கள் இருந்தாலும் அத்தனை சமயமும் சூத்திரனையும், பிராமணனையும், பஞ்சமனையும் [பறையனையும்] ஒப்புக்கொண்டே இருக்கின்றது. 

அன்றியும் இந்த முறையானது இந்துமத உட்பிரிவு சமயங்களாகிய சைவத்தின் சிவபுராணத்திலும், பெரிய புராணத்திலும், 63 நாயன்மார்களிலும், மற்றும் சமயாச்சாரிகளிலும் இருக்கின்றது என்றால் பிறகு இதை ஆக்ஷே பிக்க யாருக்கு, எந்த சைவனுக்கு உரிமை உண்டு? என்று யோசித்துப் பாருங் கள். அதுபோலவே வைணவத்திலும் அவர்களது ஆழ்வாராதிகளிலும், பகவத் பாகவத பக்தர்களிலும், நாலாயிரப் பிரபந்தம், இராமாயண முதலிய இதிகாச புராணங்களிலும் ஆதாரம் இருக்கின்றது என்றால் பிறகு இதை ஆக்ஷேபிக்க யாருக்கு எந்த வைணவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்து மதத்திற்கு ஆதாரமான வேத சாஸ்திரம், ஸ்மிருதி முதலியவைகளிலும் இருப்பதோடல்லாமல் “பகவான் வாக்கு” களிலும், ‘ரிஷிகள்' வாக்குகளிலும் இருக்கின்றது என்றால் பிறகு இதை ஆக்ஷேபிக்கின்ற 'இந்து' என்பவன் யோக்கியனாகவோ, அல்லது அறிவுடையனாகவோ இருக்க முடியுமா? என்று யோசித்துப்பாருங்கள். 

ஆகவே நம்மவர்கள் தங்களுக்கு சூத்திரப்பட்டமும், தீண்டாதார், பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப் பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமே யாகும். ஏனெனில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளு கின்றானோ அவனெல்லாம் சூத்திரப்பட்டமும், பஞ்சமப்பட்டமும் தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை. 

இந்து மதம் உள்ளவரை 

இந்தியாவில் இந்துமதம் உள்ளவரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்துமத வேதமும், சாஸ்திரமும், இராமாயண பாரதமும், பெரிய புராணம் சிவபுராணம் திரு விளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ள வரையிலும் சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்துவிடுவது என்பது முடியவே முடியாது. 

திரு. காந்தி எவ்வளவுதான் மகாத்மாவானாலும் 'சாமி' வேதாசலமும் எவ்வளவுதான் சுவாமியானாலும், "சுவாமி” சகஜானந்தமும் எவ்வளவுதான் சுவாமியானாலும் எதுவரையிலும் தங்களை இந்துக்களென்றோ, சைவர் கெளென்றோ சொல்லிக்கொள்ளுகின்றார்களோ அது வரையில் அவர்கள் சூத்திரர்கள் என்பதையும் மூன்றாவதவர், பஞ்சமர் (பறையர்] என்பதையும் பிரிவீ கவுன்சில் வரையில் ருஜுபிக்கமுடியும். அவர்களை அப்படிக் கூப்பிட உலக மக்களுக்கு உரிமையுண்டு. மேல்கண்ட இவர்கள் எதுவரை இந்து மதப்பிரசாரமும், சைவப்பிரசாரமும் செய்கின்றார்களோ அதுவரை இவர்கள் தங்களுள்பட மக்களை சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கி நிலைநிறுத்த முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன். 

சம்பந்தனை ஒப்புக்கொண்டசைவன், சம்மந்தன் பாடிய 'சாமி'களை ஒப்புக்கொண்ட சைவன், சம்மந்தனின் தேவாரங்களையும் சம்மந்தனின் சமயங்களையும் ஒப்புக்கொண்ட சைவன், சம்மந்தனைப் பார்ப்பனன் என்று ஒப்புக்கொண்ட சைவன் ஒருவன் தன்னை சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உண்டா? என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள். 

அதுபோலவே நந்தனை ஒப்புக்கொண்ட ஒருவன் அதுவும் நந்தன் பறையன். அவன் எங்கள் ஜாதி” என்று ஒப்புக்கொண்ட ஒருவன் தன்னை பறையன் அல்ல என்றும், தான் தீண்டாதவன் அல்ல என்றும் சொல்ல முடியுமா? என்று யோசித்துப்பாருங்கள். உத்தியோகப் பார்ப்பனனுடனும், எலக்ஷன் பார்ப்பனனுடனும் சண்டை போடுவதற்கு வேண்டுமானால் ஏதாவது தந்திரம் பேசலாம், “தமிழ்நாட்டில் ஆதியில் ஜாதியில்லை ” என்று சொல்லலாம், சாமர்த்தியமாய் விவகாரம் செய்யலாம். ஆனால் தன்னை இந்து என்றோ, சைவன் என்றோ, வைணவன் என்றோ சொல்லிக்கொண்டு வேறு ஒருவனிடம் விவகாரம் பேசி தன்னை சூத்திர வகுப்பிலிருந்தும், பஞ்சம வகுப்பிலிருந்தும் விலகிக்கொள்ள முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். (சற் சூத்திரன் என்று சொல்லிக்கொள்வதால் தப்பித்துக் கொள்ள முடியாது) 

காந்தி சுயராஜ்யத்தில் நமது நிலைமை 

திரு காந்தியால் வரும்படியான சுயராஜியம் அது எப்படிப்பட்ட தானாலும் எவ்வளவு பயனுள்ளதானாலும் பயனற்றதானாலும் இந்துமதத் தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாக இருக்கும் என்பதில் மாத்திரம் சந்தேகப் பட வேண்டியதில்லை. 

அதுவும் எப்படிப்பட்ட இந்துமத மென்றால் வர்ணாச்சிரம தர்மத் தோடு கூடின பரம்பரை ஜாதித்தொழிலையும் வகுப்புப்பழக்க வழக்கங்க ளையும் நடத்திக்கொடுக்க முயற்சிக்கும்படி-கட்டாயப் படுத்தும்படியான இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாய்த்தான் இருக்கும் என்பதில் யாரும் எவ்வித ஆக்ஷேபணையும் கொள்ள வேண்டியதில்லை. 

ஆகவே திரு. காந்தியின் சுயராஜ்யகாலத்தில் யார் யார் இந்துவோ அவர்கள் எல்லோருமே இந்த மூன்று ஜாதியின் கீழ் தான் வரவேண்டும். அதாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் ஆகிய விதியில் தான் வர வேண்டும். அந்தக்காலத்தில் இந்துக்கள் என்பவர்கள் இன்றையதினம் சுயராஜியமில்லாத காலத்தில் அனுபவிக்கும் உரிமையும், பேசும் உரிமையும், எழுதும் உரிமையும் , கேட்கும் உரிமையும்கூட ஒருநாளும் அனுபவிக்கமுடியாது என்பதை கெட்டியாய் மனதிலிறுத்துங்கள். ஏனெ னில் காந்தி சுயராஜ்ய காலத்தில் மத சம்பந்தமான விஷயங்களைப்பற்றியும் ஜாதி சம்பந்தமான விஷயங்களைப்பற்றியும் பேசுபவர்கள் எல்லாம் சட்டப்படி 124-A, 153-A என்பது போன்ற துரோக சட்டங்களின் கீழும் குற்றமாகக்கருதி தண்டிக்கப்பட வேண்டியதாகி விடுவார்கள். 

அன்றியும் ஒரு மனிதன் தான் “இந்து மதத்தை விட்டு வெளியில் போய் விடுகிறேன்” என்பதும் வெளியில் போவதும் குற்றமானதாகவே கருதப்பட்டாலும் கருதப்படலாம். அதற்காக சட்டமுமியற்றப்படலாம். ஏனெனில் இந்துமத கோட்பாட்டின்படி ஒரு மனிதன் பிறவியில் எந்த மதத்தில் எந்த ஜாதியில் பிறந்தானோ அந்த மதத்தில் அந்த ஜாதியில் தான் சாகின்ற வரையில் இருந்தாகவேண்டும். அதனால் தான் திரு. காந்தியும் “நான் கோறும் சுயராஜ்யம் வந்தால் கிறிஸ்து மதத்திற்கு பிரசாரமாகிய ஆஸ்பத்திரி பள்ளிக்கூடம் முதலியனவை வைத்து நடத்தும் பாதிரிமார் களை யெல்லாம் இந்தியாவை விட்டு விறட்டி விடுவேன்” என்று துணிந்து சொன்னார். அந்தப்படி அவர் சொன்ன தானது வேண்டுமென்று சொன்னதாக யாரும் நினைத்துவிடக்கூடாது. மதம் மாறுவது அவ்வளவு இழிவான தென்றும் பாபமானதென்றும் அதற்கு இடம் கொடுப்பது அவ்வளவு தோஷ மானதென்றும் இந்து மத தத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. திரு.காந்தியவர்கள் கிறிஸ்து வர்களைச் சொன்னது போல் மகமதியர்களைச் சொல்லாததற்குக் காரணம் மகமதியர்களிடத்தில் இருக்கும் “முறட்டுத் தனத்தின்” காரணமான பயமே யொழிய மற்றபடி மகமதியர்களை மத மாற்றம் செய்ய அனுமதிப்பது குற்றமாகாது என்கின்ற எண்ணத்தாலல்ல. ஆகையால் காந்தீய சுயராஜ்யமென்பது இந்துக்களில் சூத்திரர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும் பஞ்சமர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும் மிகவும் ஆபத்தானது என்பதை யாரும் மறந்து விடாதீர்கள், திரு. காந்தியவர்கள் பல தடவைகளில் சொல்லியிருக்கும் சமத்துவ தத்துவத்தின் விளக்கத்தையும் நினைப்பூட்டிக்கொள்ளுங்கள். அதாவது, “சமத்துவமென்பது ஆத்துமாவுக்கே யொழிய சரீரத்திற்கல்ல” என்று சொல்லியிருக்கின்றார். 

மற்றும் அவர் 1919-20ல் “தீண்டாமை யொழியாமல் நான் ஒரு நாளும் சுயராஜ்யம் கேட்கமாட்டேன்” என்றும் சொன்னதோடு, “இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாததற்கு முன் நான் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்” என்றும் சொன்னதோடு “இவை இரண்டும் ஒழியாததற்கு முன் கிடைக்கும் சுயராஜ் யம் நிலைக்காது” என்றும், “நிலைத்தாலும் மக்களுக்குள் இரணகளமாகும் படியான கலகம் ஏற்படும்” என்றும் சொல்லியிருக்கின்றார். 

இப்படிப்பட்ட இவர் இப்போது தைரியமாய், "தீண்டாமை ஒழியவேண்டியதும் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் நாட்டை என் வசம் ஒப்புவித்து விட்டு விலகிக் கொள்ளுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக்கொள்ளுகின்றேன்” என்று பிரிட்டிஷாரை கேட்கின்றார். 

 

இதன் அருத்தமென்ன? என்று யோசித்துப்பாருங்கள். ஆட்சி தனது கைக்கு வந்து விட்டால் பட்டாளம் தனது கையில் ஒப்படைத்து விட்டால் பார்ப்பனர்களையும் பனியாக்களையும் (முதலாளிகளையும்) பட்டாளத்தில் சேர்த்து இராணுவச்சட்டத்தினால் முஸ்லீம்களையும் தீண்டாதார்களையும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்கின்ற எண்ண மில்லாமல் வேறு என்ன எண்ணம் இருக்கக்கூடும்? என்று யோசித்துப் பாருங்கள். 

ஆகவே எனதருமைச் சகோதரர்களே! தீண்டப்படாத சகோதரர் களே!! தெருவில் நடக்க-குளத்தில் தண்ணீர் மொண்டு குடிக்க-கண்ணில் தென்பட உரிமை இல்லாத சகோதரர்களே!!! நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமானால் ஒன்று:- இந்துமதத்தை விட்டு வெளியேறுங் கள். இரண்டு:- முகமதியர்களைச் சாருங்கள். இந்த இரண்டு காரியத்தாலும் நாம் உலக மக்களுக்கே சுயமரியாதை கொடுக்கலாம். மற்றபடி நமக்கு வேறு விமோசனமே இல்லை! இல்லை! இல்லை!! 

குடி அரசு - கட்டுரை - 25.10.1931

 
Read 13 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.